வேளச்சேரி: சென்னை புனிததோமையர் மலை, இந்திரா தெருவை சேர்ந்தவர் மாத்யூ வில்சன் (22). இவர், அடையாறில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு வேலை முடிந்து, மாத்யூ வில்சன் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இவர் அடையாறு அருகே தனியார் மருத்துவமனை அருகே சென்றபோது, மாத்யூவை மற்றொரு பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் வழிமறித்தனர்.பின்னர் அவரின் செல்போனை பறிக்க முயன்றனர். அவர் தர மறுக்கவே, மாத்யூவை சரமாரியாகத் தாக்கிவிட்டு, விலையுயர்ந்த செல்போனை பறித்து பைக்கில் தப்பி சென்றனர். அவர்களை மாத்யூவும் பின்தொடர்ந்து விரட்டி சென்றுள்ளார்.
இதை தூரத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போக்குவரத்து போலீசார் பார்த்து, பைக்கில் சென்ற 2 மர்ம நபர்களை மடக்கி பிடித்து, அடையாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், அவர்கள் பழைய குற்றவாளிகளான பழைய வண்ணாரப்பேட்டை டில்லி (எ) டில்லிபாபு (26), கொருக்குப்பேட்டை அசோக்குமார் (எ) மாட்டு அசோக் (24) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள்மீது சென்னை நகர காவல் நிலையங்களில் 10க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இப்புகாரின்பேரில் அடையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பழைய குற்றவாளிகளையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போன், பைக் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.