அண்ணாநகர்: சென்னை அண்ணாநகர் புதிய காவல் மாவட்டம் உருவாக்கப்பட்ட நிலையில், புதிய துணை கமிஷனராக விஜயகுமார் பொறுப்பேற்றுக்கொண்டார். இதன்பிறகு அவர் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக ரவுடிகள் பட்டியல் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பந்தப்பட்ட வழக்குகள், செயின், செல்போன் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளையடிப்பது ஆகிய குற்றச்சம்பவங்களை தடுக்கப்பட்டது. குறிப்பாக, குற்றச் சம்பவங்களை தடுக்கவும் பெண்கள் மீதான குற்றச் சம்பவங்களை தடுக்கவும் தனிப்படைகள் அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்.
கடந்த ஒரு மாதத்தில் அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒரு குற்ற வழக்குகள் கூட பதிவாகவில்லை. குறிப்பாக பழைய குற்றவாளிகளின் பட்டியல் மற்றும் குற்றச் சம்பவங்கள் ஈடுபட்டவர்களின் பட்டியலை சேகரித்து அவர்களை கண்காணித்து கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரோந்துபணி அதிகரித்துள்ள நிலையில் தற்போது அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட போலீஸ் நிலையங்கள் கடந்த ஒரு மாதத்தில் எந்தவித குற்ற வழக்குகளும் பதிவாகவில்லை. இதனால் அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அண்ணாநகர் காவல் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகள், பள்ளிகள், பூங்காக்கள் ஆகிய பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘’அண்ணாநகர் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகளின் அட்டகாசம், செயின், செல்போன் பறிப்பு சம்பவம் அதிகரித்தது. தற்போது போலீசார் எடுத்த தீவிர நடவடிக்கை காரணமாக குற்றங்கள் வெகுவாக குறைந்துவிட்டது. புதிய கமிஷனர் விஜயகுமாரின் தீவிர நடவடிக்கையால் ரவுடிகள் கொட்டம் அடங்கியுள்ளது. இதனால் நாங்கள் நிம்மதியாக இருப்பதுடன் போலீசாரின் நடவடிக்கை எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றனர்.