மதுரை: ஆவின் சார்பில் பாளைப்பட்டியில் தொடங்கப்பட்டுள்ள ஆவினுக்கு பால் அனுப்ப முடியாது என்றும், மதுரை ஆவினுக்கு மட்டுமே அனுப்பப்படும் என்று கூறி பாலை சாலையில் கொட்டி உற்பத்தியாளர்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
உசிலம்பட்டி முதல் கே.பெருமாள் கோவில்பட்டி வழித்தடத்தில் உள்ள 13 கிராமங்களிலிருந்து தினமும் மதுரை ஆவினுக்கு பால் அனுப்பப்படுகிறது. தற்போது பாறைப்பட்டியில் ஆவின் தொடங்கப்பட்டள்ளதால் பாலை அங்கு அனுப்பி வைக்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பால் உற்பத்தியாளர்கள் உசிலம்பட்டி எழுமலைப்பிரிவில் பாலை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உள்ளூர் ஆவினுக்கு பாலை அனுப்ப மாட்டோம் எனக் கூறி முழக்கங்களையும் எழுப்பினர். தகவல் அறிந்து சென்ற காவல் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. முன்னதாக போராட்டம் காரணமாக அப்பகுதியில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.