ஏற்காடு : ஏற்காட்டில் 2வது நாளாக கடும் பனிமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் வந்து செல்கின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வு வழங்கி, மலர் கண்காட்சி நடைபெற்ற நிலையில், ஏற்காட்டுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் சீதோஷண நிலை மாறியுள்ளது. கடந்த இரு நாட்ளாக ஏற்காட்டில் கடும் பனிமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது.
இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நாள் முழுவதுமாக கடும் பனிமூட்டமும், சாரல் மழை பெய்து வருவதால், சுற்றிப்பார்க்க வந்த வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தை சேர்ந்தவர்கள் ரிசார்ட்டுகளில் முடங்கினர். ஒரு சிலர் குடைகளை பிடித்தவாறு அண்ணா பூங்காவை சுற்றிப்பார்த்து மகிழ்ந்தனர். இரண்டாவது நாளாக இதே நிலை தொடர்வதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் ஊர்களுக்கு திரும்பிச்சென்றனர். ஏற்காட்டில் பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.