×

உடுமலை சுற்றுலாத்தலங்கள் மேம்படுத்தப்படுமா?

உடுமலை : உடுமலையில் உள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க  வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமராவதி அணை,  முதலைப் பண்ணை, திருமூர்த்தி அணை, வண்ண மீன் காட்சியகம், நீச்சல் குளம்,  பஞ்சலிங்க அருவி, அமணலிங்கேஸ்வரர் கோயில் என பிரசித்தி பெற்ற சுற்றுலாத்  தலங்கள் அமைந்துள்ளன. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சுற்றுலாத் தலங்களை  பார்வையிட வருகின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை நாட்களில்  சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருக்கும். வெளி மாவட்டங்கள்  மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் அணைகள், அருவிகள், பூங்காக்களை  பார்க்க குழந்தைகளுடன் பெற்றோர் வருகின்றனர்.

வடமாநிலங்களில் இருந்து  வரும் சுற்றுலாப் பயணிகள் பலரும் ஆன்மிக தலங்களான பழனி, மதுரை,  திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் உள்ளிட்டவற்றுக்கு உடுமலை வழியாக  பயணிக்கின்றனர். அவர்கள் செல்லும் வழித்தடங்களில் அமராவதி அணை,  திருமூர்த்தி அணை குறித்த தகவல்களை உடுமலை மத்திய பஸ் நிலையம், ரயில்  நிலையம் மற்றும் முக்கிய சந்திப்புகளில் வரைபடங்களுடன் வழித்தடங்கள்  குறித்த தகவல் பலகை வைக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: அமராவதி அணை மற்றும்  திருமூர்த்தி அணை ஆகியவற்றில் அரசு சார்பில் பூங்காக்களை பொலிவுபடுத்த  வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். இதற்காக  சுற்றுலாத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை  இல்லை. 10 லட்ச ரூபாய் மதிப்பில் அமராவதி அணை அருகே உள்ள முதலை  பண்ணையில் குழந்தைகளை கவரும் வகையில் சிறுவர் விளையாட்டு பூங்கா  அமைக்கப்பட்டது.

ஆனால் இது குறித்து பெரிதாக விளம்பரப்படுத்தப்படாததால்  அமராவதி அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் அணை அருகே உள்ள அலங்கோலமாக காட்சி  அளிக்கும் பூங்காவை மட்டுமே கண்டு அதிருப்தி அடைவதோடு திரும்பி  விடுகின்றனர். ஒரு சிலரே முதலைப் பண்ணைக்கு சென்று சிறுவர் விளையாட்டு  பூங்காவை கண்டு மகிழ்கின்றனர். குழந்தைகளுக்கான சறுக்கு, ஊஞ்சல், சீஷா  மற்றும் வன விலங்குகளின் உருவங்கள் அமைக்கப்பட்ட இருக்கைகள் போன்றவை  குறித்து சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால்  பொதுப்பணித்துறை மற்றும் வனத் துறைக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கும்.

அமராவதி அணை பூங்கா அருகே செல்லும் சாலையை செப்பனிட்டு, அணை பூங்காவை  சுத்தப்படுத்தி, வண்ண நீரூற்றுகள் மற்றும் வண்ண மலர் கண்காட்சிகள்  அமைப்பதற்கு ஏற்ற வகையில் மலர் செடிகள் அமைத்தால் சுற்றுலா பயணிகள்  மகிழ்ச்சி அடைவர். கூட்டாறு பரிசல் பயணம், மலை நடை பயணம் போன்றவை குறித்தும் விளம்பரப்படுத்த வேண்டும். சுற்றுலா  தலங்களை காண வாகன ஓட்டிகளின் கண்களில் படும் வகையில் சுற்றுலா தலங்கள்  குறித்த வழித்தடங்களும் அவற்றின் பெருமை குறித்தும் விளம்பர பலகைகளை  நடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதன்மூலம்  உடுமலை சுற்றுலா தலங்கள் பிரபலமாவதோடு, சுற்றுலா வருவாய் பெருகும்.  உள்ளூர் கடைக்காரர்கள், வாகன ஓட்டிகள், வனப் பொருள் விற்பவர்களுக்கும்  வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Udumalai: Tourism enthusiasts have demanded that steps should be taken to improve the tourist spots in Udumalai.
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை