சென்னை: தமிழ் திரைப்பட தொழிலாளர்களின் நலன் கருதி, முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில், செங்கல்பட்டு மாவட்டம் பையனூர் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட 100 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டு இருந்தது. மேலும், குடியிருப்புகளுடன் படப்பிடிப்பு அரங்குகள் அமைக்கதிட்டமிடப்பட்டது. பையனூர் கலைஞர் நகருக்கான பணி களை மீண்டும் தொடரும் வகையில், 3 ஆண்டுகளுக்குள் குடியிருப்புகள் கட்ட வேண்டும் என்ற நிபந்தனையில் தளர்வு மற்றும் திரைப்பட அரங்குகள் அமைக்கலாம் என்ற அனுமதி வேண்டி திரைத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுடன் தென்னிந்திய நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி எஸ்.முருகன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி ராமசாமி, துணை தலைவர் எஸ்.கதிரேசன், செயலாளர் ஆர்.ராதாகிருஷ்ணன், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, துணை தலைவர் செந்தில், பொருளாளர் சுவாமிநாதன் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்க பொதுச்செயலாளர் போஸ் வெங்கட் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
துணை நடிகர்கள் சம்பள உயர்வு பேச்சுவார்த்தை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம் இடையே துணை நடிகர்கள் சம்பள உயர்வு உள்பட இருதரப்பிலும் காணப்படும் பல்வேறு பிரச்னைகள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது.