×

அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒரு முறை சட்ட விதிகளை மாற்றியது இல்லை; கேலிக்கூத்து என சசிகலா குற்றச்சாட்டு

தஞ்சாவூர்: அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒருமுறை கட்சி சட்ட விதிகளை யாரும் மாற்றியது இல்லை. இது  மிகப்பெரிய கேலிக்கூத்து என்று சசிகலா குற்றம் சாட்டியுள்ளார். தஞ்சாவூரில் சசிகலாவின் தம்பி திவாகரன் கட்சியான அண்ணா திராவிட கழகத்தை, சசிகலாவுடன் இணைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் பங்கேற்று சசிகலா பேசியதாவது: அதிமுகவில் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் வேதனையை ஏற்படுத்துகிறது. ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவதா?. இதனால் அதிகம் பாதிப்படைவது அப்பாவி தொண்டர்கள் தான். இப்போது நடைபெற்றதாக சொல்லப்படும் பொதுக்குழுக்கள் அனைத்தும் நிர்வாகிகள் கூட்டமாகத்தான் தொண்டர்கள் பார்க்கிறார்கள்.

அதிமுக வரலாற்றிலேயே இதுபோன்று ஆண்டுக்கு ஒருமுறை கட்சி சட்ட விதிகளை யாரும் இப்படி மாற்றியது இல்லை. இது மிகப்பெரிய கேலிக்கூத்தாக இருக்கிறது.இவர்கள் செய்கின்ற காரியங்கள் அனைத்துமே சட்டப்படி செல்லாது. விரைவில் ஒரு நல்ல தீர்வு ஏற்படும். இவற்றையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு அப்படியே விட்டுவிட முடியாது. எத்தனையோ சூழ்ச்சிகளையும், துரோகங்களையும் வென்றெடுத்த இந்த இயக்கம், தற்போது ஏற்பட்டுள்ள சூழ்ச்சி வலையிலிருந்தும் கண்டிப்பாக விடுபடும். நான் இருக்கின்ற வரை யாராலும் இந்த இயக்கத்தை அபகரித்துவிடவோ, அழித்துவிடவோ முடியாது. எல்லாவற்றையும் சரி செய்து, அனைவரையும் ஒருங்கிணைப்பேன் என்றார்.


Tags : AIADMK ,Sasikala , AIADMK has never in its history changed the rules once a year; Sasikala accuses it of being a farce
× RELATED சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில்...