சென்னை: கோயம்புத்துர் வடவள்ளி பகுதியை ஒப்பந்ததாரர் சந்திர சேகர் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் செய்யாதுரை ஆகியோருக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 6-ம் தேதி வருமான வரி சோதனை என்பது தொடங்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்களாக தமிழகம் முழுவதும் அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. முக்கியமாக இவர்கள் வருமானத்தை மறைத்து பலகோடி அளவிற்கு சொத்துகளை சேர்த்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையெழு, ஏற்கனவே தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த தகவலின் அடிப்படையிலும் இந்த வருமான பரிசோதனையானது தொடர்ந்து நடைபெற்றது.
இந்த சோதனையின் முடிவில் இரண்டு ஒப்பந்ததாரர்களும் கணக்கில் வராத 500 கோடி ரூபாயை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் சோதனையின் போது வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து பார்க்கும் போது முதற்கட்டமாக அவர்கள் போலியான பல ரசீதுகளை தயாரித்தது, அதனை கணக்கு காட்டி, பல பொருட்களை வாங்குவதில் நேரடியாக தொகைகளை பெற்றுள்ளதை கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அரசு ஒப்பந்தம் செய்யும் போது அதற்கு பல பொருட்கள் வாங்கும் போது அதற்கான ரசீது மற்றும் அதற்கான கணக்குகள் போலியாக காட்டப்பட்டுள்ளதாகவும், அந்த கணக்குகளுக்கான தொகை என்பது சம்பந்தப்பட்ட நபர்களிடம் இருந்து ரொக்கமாக பெறப்பட்டது. அவ்வாறு பெறப்பட்ட ரொக்கங்களை சொத்துக்களாக மாற்றியுள்ளர்கள். அந்த விவரங்களை அனைத்தையும் வருமான வரித்துறையினருக்கு கணக்கு காட்டாமல் வைத்துள்ளார்கள்.
இது தொடர்பாக இரண்டு அரசு ஒப்பந்ததார்களுக்கும் சம்மன் அனுப்பி தொடந்து விசாரணையானது நடைபெறும் எனவும், இவர்களுக்கு எங்கிருந்து எல்லாம் பணம் ரொக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான விசாரணை நடைபெறும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.