×

சிவகங்கை அருகே இரும்பு உருக்காலை எச்சம் கண்டுபிடிப்பு

சிவகங்கை : சிவகங்கை அருகே பெரியமாங்குடியில் பெருங்கற்கால இரும்பு உருக்காலை எச்சம் கண்டுபிடிக்கப்பட்டது. பெரிய மாங்குடியில் உள்ள முனியன் கோவிலுக்கு கிழக்கே காட்டுப்பகுதியில் வித்தியாசமான கற்களும், பானை ஓடுகளும் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவ்வூரைச் சேர்ந்த பொன்னம்பலம் என்பவர் கொடுத்த தகவலின்பேரில் பாண்டியநாடு பண்பாட்டு மைய வரலாற்று ஆர்வலர்கள் மீனாட்சி சுந்தரம், தாமரைக்கண்ணன் மற்றும் பொன்னம்பலம் ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்ததில் இப்பகுதியில் பழங்கால இரும்பு உருக்காலை இருந்ததை கண்டுபிடித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: இந்த காட்டுப்பகுதியில் ஏராளமான இரும்பு உருக்கு கழிவுகள் கருமை நிறத்தில் பெரும் குவியலாக காணப்படுகிறது, பல துண்டு குழாய்களும் மேற்பரப்பிலே கள ஆய்வில் கண்டறியப்பட்டது. சுடுமண்ணால் செய்யப்பட்ட குழாய்கள் மேற்பரப்பில் சிதைவுற்றுக் கிடக்கின்றன. இரும்பு உருக்கும் உலைகளில் பயன்படுத்தப்படும் கெண்டியின் பாகங்கள் அதிக அளவில் சிதைந்து கிடக்கின்றன.

இப்பகுதியில், இரும்பை உருக்கும்போது கிடைக்கும் சிறிய துண்டுக் கழிவுகளும் இரும்பு தாது இடம்பெறும் மூலப்பொருட்களான பெரியகற்களும் ஏராளமாக பரவிக் கிடக்கின்றன. மேலும் இரும்பை உருக்கப் பயன்படும் எரியூட்டும் அடுப்பை போன்ற அமைப்பும் இங்கு காணப்படுகிறது. ஏராளமான சிவப்பு பானை ஓடுகளும் கருப்பு, சிவப்பு பானை ஓடுகளும் அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் பானையின் விளிம்பு பகுதியில் வரிவரியாய் கோடுகள் அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. இப்பகுதியில் அதிக அளவில் கிடைக்கும் செம்பூரான் கற்களும் செம்பூரான் பாறையிலேயே சற்றே தரமான கற்களும் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த பாறையில் இரும்பிற்கான மூலப்பொருள் இருப்பதையும் அதனை எரியூட்டி உருக்கினால் இரும்புப் பொருட்கள் செய்யலாம் என்பதையும் அக்கால மக்கள் அறிந்து வைத்திருந்தனர் என்பதை அறியமுடிகிறது. பழங்காலத்தில் இங்கே வாழ்ந்த மக்கள் இரும்பு பொருட்களான கத்தி, கோடாரி, ஈட்டி போன்றவைகளை தயாரிக்கும் தொழிற்கூடமாக இப்பகுதியை பயன்படுத்தியிருக்கலாம் என்றும், 2000ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி இரும்பு காலத்தைச் சேர்ந்த ஆதிமனிதர்களின் வாழ்விடப் பகுதியாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

Tags : Sivagangai , Sivagangai : Remains of Iron Age Iron Smelter were found at Periyamangudi near Sivagangai. The one in Big Mangudi
× RELATED நாய் குட்டிகளுக்கு 3 மாதத்தில் தடுப்பூசி போட அறிவுறுத்தல்