×

நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

நெல்லை: நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் 2 ஆண்டுக்கு பின்னர் நேற்று நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து இழுத்தனர். நெல்லை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுவாமி நெல்லையப்பர் - காந்திமதியம்மன் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக கோயில் உள்பகுதியிலேயே எளிமையாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

8ம் திருநாளான நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு, தேரடி கருப்பசாமிக்கு சைவ படையலிட்டு, 108 எலுமிச்சை மாலை சாற்றி தேரோட்ட அனுமதி பூஜை செய்யப்பட்டது. 12.30 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடித்து சன்னதி வரை  இழுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தேர் கடாட்ச வீதி உலாவாக சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்கக்கிளி வாகனத்திலும் நகர் வீதி உலா நடந்தது. இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். அதிகாலை 2.30  மணிக்கு முருகன் தேர் இழுக்கப்பட்டு சுவாமி சன்னதி அருகே  நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அதிகாலையில் பிரியாவிடையுடன் சுவாமி நெல்லையப்பரும், காந்திமதி அம்மனும் தனித்தனியாக தேரில் எழுந்தருளினர். காலை முதலே தேரோட்டத்திற்காக பக்தர்கள் திரண்டனர். இதை முன்னிட்டு நெல்லை நகரமே விழாக்கோலமாக காட்சியளித்தது. காலை 9.22 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் பெரிய தேர் சிறப்பு தீபாராதனையுடன் பஞ்சவாத்தியங்கள் முழங்க வடம் பிடித்து இழுக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு, தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். கலெக்டர் விஷ்ணு, எம்எல்ஏக்கள் அப்துல்வஹாப், நயினார் நாகேந்திரன், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம். சரவணன் உள்ளிட்டோரும் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Nellaiyapar Temple ,Therotam Kolagalam , Nellaiyapar Temple Therotam Kolagalam: Lakhs of devotees participate
× RELATED நெல்லையப்பர் கோயிலின் சந்திர...