ராமநாதபுரம்: மண்டபம் முகாம் ரயில்வே ஸ்டேஷன் அருகே வேன்கள் மோதியதில் மீனவர் 4 பேர் உயிரிழந்தனர். ராமநாதபுரத்தில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மண்டபம் மீனவர்கள் இரண்டு வேன்களில் ஊர் திரும்பினர். மண்டபம் முகாம் ரயில்வே ஸ்டேஷன் அருகே வேன்கள் ஒன்றன் பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது. அப்போது ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம் சென்ற பஸ் மீது ஒரு வேன் உரசியபடி முந்த முயன்றது. அப்போது, முன்னால் சென்ற வேன் மீது பின்னால் வந்த வேன் மோதாமலிருக்க டிரைவர் பிரேக் பிடித்தபோது, வேன் கவிழ்ந்தது. இதில் காயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் ரஜப் முஹமது (43), முகைதீன் அப்துல் காதர் (46), அன்சர் அலி (35), சேது (22) ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து மண்டபம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.