பெரியபாளையம்: பெரியபாளையம் அருகே சாலை தடுப்பில் லாரி மோதி விபத்துக்குள்ளானது. ஆந்திராவில் இருந்து கனரக லாரி ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் இரவு சென்னை துறைமுகம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில், பெரியபாளையம் தண்டு மாநகர் பகுதியில் உள்ள திருமண மண்டபம் அருகே சென்றபோது லாரி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் உள்ள தடுப்புச்சுவர் மீது பலமாக மோதி ஏறி நின்றது. இதில் லாரியின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ஓட்டுனர் மற்றும் கிளீனர் உயிர் தப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், `சென்னை மற்றும் திருப்பதி பெரியபாளையம் இடையே சாலையில் மின் விளக்குகள் இல்லை. சென்டர் மீடியன் ஆரம்பிக்கும் இடத்தில் எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. சிக்னல் லைட் மற்றும் வேகத்தடை இல்லாத காரணத்தால் இப்பகுதியில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடக்கிறது. எனவே, இப்பகுதியில் சிக்னல் லைட் மற்றும் வேகத்தடை அறிவிப்பு பலகை அமைத்து தரவேண்டும்’ என கோரிக்கை வைத்தனர்.