உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள, ஸ்ரீ மாதிரியம்மன் கோயில் 40ம் ஆண்டு பால்குட ஊர்வலம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் கோயிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், கணபதி ஹோம பூஜையும் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ மாதிரியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனைத்தொடர்ந்து, நேற்று காலை பால்குட ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம், வாணவேடிக்கைகளுடன் மேளதாளங்கள் முழங்க, சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் துவங்கியது. துவங்கிய ஊர்வலமானது சன்னதி தெரு, பஜார் வீதி கேதாரீஸ்வரர் கோயில் தெரு, கைலாசநாதர் கோயில் தெரு உள்பட முக்கிய வீதிகள் வழியாக கோயிலை வந்தடைந்தது. பால்குடங்களை சுமந்து வந்த விரதமிருந்த பக்தர்கள் தங்களது கரங்களாலேயே அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து அம்மனை வழிபட்டனர். நிகழ்ச்சியையொட்டி கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.