×

நாய் கண்காட்சியில் அசத்திய சிப்பிப்பாறை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், 28வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. நேற்று மாலை கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், செல்லப்பிராணிகள் கண்காட்சி நடந்தது. இதில், கோல்டன் ரெட் ரைவர், ஜெர்மன் ஷபர்டு, லேப்ராடர், பக்ஸ், சைபீரியன் ஷிஸ்கி, பிரஞ்சு புல்டாக், லசாப்போ, டால்மேசன், பாக்ஸர், டெரியர், ராட்வீலர், டாபர்மேன், டேக்ஷன்ட், கிரேட்டேன், ஸ்பிட்ஸ், பொமேரியன், ராஜபாளையம், கன்னி, சிப்பிப்பாறை, ஸ்பெனியல் மற்றும் நாட்டின நாய்கள் என 200க்கும் அதிகமான 21 வகையான நாய்களை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர். இந்த நாய்களின் அடிப்படை குணங்கள், உடல் நலம், பராமரிப்பு, சொல்லுக்கு கீழ்படிதல் உள்ளிட்ட பிரிவுகளில், உள்நாட்டு இனம், வெளிநாட்டு இனம், சிறிய ரக நாய் இனம் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

போட்டி நடுவராக சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பேராசிரியர் டாக்டர் நாகராஜன் பங்கேற்று, சிறந்த நாய்களை தேர்வு செய்தார். அதன்படி, இந்திய இனத்திற்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை சிப்பிப்பாறை இனத்தை சேர்ந்த நாய் தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளரான சக்கோடியை சேர்ந்த விஜயகாந்த் என்பவருக்கும், அயல்நாட்டு இனத்தை சேர்ந்த ஜெர்மன் ஷெப்பர்டு தேர்வு செய்யப்பட்டு, அதன் உரிமையாளரான ஓசூர் ஹரிஸ்குமார் என்பவருக்கும், பப்பி இனத்தில் லேபரடார் பப்பி நாயின் உரிமையாளரான கிருஷ்ணகிரி விக்னேஷ் என்பவருக்கும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்திற்கான கேடயங்களை, கிருஷ்ணகிரி ஆர்டிஓ சத்தீஸ்குமார் வழங்கினார். முன்னதாக காவல்துறை சார்பில் பங்கேற்ற நாய்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடந்தது.

இந்நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர். ராஜேந்திரன், உதவி இயக்குநர்கள் டாக்டர்கள். மரியசுந்தர், அருள்ராஜ், கலையரசன் மற்றும் கால்நடை மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Soldier ,Dog ,Fair , Krishnagiri : 28th All India Mangani at Krishnagiri Govt Boys High School Sports Ground
× RELATED இந்தியாவில் 23 நாய் இனங்களுக்கு தடை...