செய்துங்கநல்லூர் : கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மணக்கரை ஆனந்த நம்பிக்குறிச்சி கிராமத்தில் பொதுமக்களுக்கு ஆற்று குடிநீர் வழங்கும் வகையில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டி மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொட்டி அமைத்து பல ஆண்டுகளுக்கு மேலானதால் அதில் நான்கு பில்லர்களும் கான்கிரீட்டுகள் உடைந்து விழுந்து மோசமான அபாய நிலையில் உள்ளது. ஏற்கனவே 2012-13ம் ஆண்டுகளில் இந்த நீர்த்தேக்கதொட்டி பழுதடைந்து அப்போதும் பொதுமக்களால் கோரிக்கை வைக்கப்பட்டு பழுது பார்க்கும் பணி நடந்துள்ளது. தற்போது இந்த நீர் தேக்க தொட்டி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதனால் தொட்டியில் தண்ணீர் இருப்பு தெரிய முடியாமலும், சுகாதாரதுறையினர் குளோரின் தெளிக்கவும். ஆய்வு மேற்கொள்ளவும் முடியாத நிலையில் உடைந்து விழுந்து விடுமோ என்ற அச்சம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இதனால் மேல் நிலை நீர்தேக்க தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் கிராமத்தில் உள்ள சிறுவர்கள் நீர்த்தேக்க தொட்டியின் அபாய நிலை தெரியாமல் அதன் அருகே சென்று விளையாடி வருகின்றனர், அதனை கண்ட ஊர் பெரியவர்கள் சிறுவர்கள் அதன் அருகில் செல்லமாலிருக்க தற்காலிகமாக முள்வேலி அமைத்துள்ளனர். ஆனாலும் கால்நடைகள் வேலியை தாண்டி தொட்டியின் கீழ் சென்று படுத்து கிடக்கின்றன. எனவே எந்த நேரத்திலும் இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பாதுகாப்பின்றி காணப்படுகிறது.
இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவர், செயலர் மற்றும் யூனியன் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். எனவே இந்த நீர் தேக்க தொட்டி இடிந்து விழுவதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் ஆய்வு செய்து பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு, புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டு சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.