×

ஒரகடம் அருகே வாகனம் மோதி புள்ளிமான் பலி

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் அருகே நேற்று அதிகாலை பனப்பாக்கம் வனப்பகுதியில் சாலையை கடக்க முயன்ற புள்ளிமான் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், புள்ளிமான் அடிபட்ட அதே இடத்தில் துடிதுடித்துக் கொண்டிருந்தது. இளைஞர்கள் சிலர் சுற்றுலா சென்று விட்டு வாகனத்தில் திரும்பும்போது புள்ளிமான் சாலையில் அடிபட்டு துடித்துக் கொண்டிருப்பதை கண்டு உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அப்பகுதியில் பொதுமக்கள் சிலரும் கூடியுள்ளனர். மேலும், உடனடியாக அவர்களும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விபத்தில் படுகாயம் அடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை அளிக்க பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும், சம்பவ இடத்திற்கு உரிய நேரத்தில் வராததால் புள்ளிமான் பொதுமக்கள் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்தது.

வனத்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் புள்ளிமான் உயிரிழந்ததால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் வண்டலூர் - வாலாஜாபாத் செல்லும் நெடுஞ்சாலையில்  அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மான் உயிரிழந்தது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் வனத்துறையினரிடம் சரமாரி கேள்வி எழுப்பி தீவிர வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், வனப்பகுதியில் வாகனங்கள் மெதுவாக செல்ல எச்சரிக்கை பலகை வைக்காததும், வனப்பகுதியை ஒட்டி வேலி அமைக்காததும் தொடர்ந்து அடையாளம் தெரியாத வாகனங்கள் மோதி வனவிலங்குகள் உயிரிழந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவ இடத்திற்கு வந்த ஒரகடம் போலீசார் இளைஞர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Tags : Oragadam , Spotted deer killed in vehicle collision near Oragadam
× RELATED தனியார் தொழிற்சாலை மேற்பார்வையாளரை...