×

வேனில் வந்த கும்பல் அட்டூழியம் தென் ஆப்ரிக்கா பாரில் 15 பேர் சுட்டுக்கொலை

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவில் மதுபான விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டனர். ஜோகன்னஸ்பர்க் நகரின் சொவேட்டோ பகுதியில் இயங்கி வரும் மதுபான விடுதிக்கு கடந்த சனிக்கிழமை இரவு மினி பஸ்சில் வந்த மர்ம கும்பல், அங்கு கூடியிருந்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக சரமாரியாக சுட்டது. இதில், 15 பேர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்த மக்கள் அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர். குண்டு பாய்ந்து படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 3 பேர் உள்பட பலர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய கும்பல், அதிக திறன் வாய்ந்த நவீன துப்பாக்கியை பயன்படுத்தி உள்ளது. உரிமம் பெற்ற மதுபான விடுதியில், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் குடித்து கொண்டிருந்தவர்கள்ம மீது எதற்காக இந்த கொடூரமான துப்பாக்கிச்சூடு நடத்தபட்டது என்பதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags : South Africa , Gang in van kills 15 in South Africa bar
× RELATED தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பெண் சிவிங்கி புலி 5 குட்டிகளை ஈன்றது