சென்னை: திவாகரன் தான் நடத்தும் கட்சியை சசிகலா கட்சியுடன் இணைக்கிறார். இதற்கான விழா வருகிற 12ம் தேதி நடக்கிறது. சசிகலா சகோதரர் திவாகரனுக்கும், டி.டி.வி.தினகரனுக்கும் மோதல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு மன்னார்குடியில் திவாகரன் ‘அண்ணா திராவிட கழகம்’ என்ற கட்சியை தொடங்கினார். இந்த கட்சியின் பொதுச்செயலாளராக அவரே இருந்தார். இந்நிலையில் தன் கட்சியை சசிகலா கட்சியோடு இணைக்கிறார்.
இது தொடர்பாக சசிகலா அணி தரப்பில் நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: சசிகலா தலைமையிலான அதிமுகவோடு, அண்ணா திராவிடர் கழகத்தை இணைக்கும் விழா வருகிற 12ம் தேதி(செவ்வாய் கிழமை) காலை 11 மணிக்கு தஞ்சாவூரில் அமைந்துள்ள தமிழரசி திருமண மண்டபத்தில் நடக்கிறது. இந்த நிகழ்வில் கட்சி நிர்வாகிகள், முன்னோடிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.