தஞ்சாவூர்: தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் விரைவில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தஞ்சாவூரில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் 94.68 சதவீதம் பேரும், இரண்டாம் டோஸ் 85.47% பேரும் செலுத்தி கொண்டுள்ளனர். தமிழகத்தில் தடுப்பூசி போடப்பட்டதால் மக்களிடையே 88 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: பூஸ்டர் தடுப்பூசிக்கு ரூ.386 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சூழலில், நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அந்தந்த நிறுவனம் இலவசமாக தடுப்பூசியை செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இந்நிலையில் ரூ. 150 சர்வீஸ் கட்டணத்தை குறைத்துக் கொள்வதாக அப்பல்லோ மற்றும் காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதே போல தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேவை கட்டணங்களை குறைப்பது தொடர்பாக பேசப்பட்டு வருகிறது. விரைவில் தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.