நடிகை கொடுத்த புகார் வாபஸ் பெறப்பட்டதால் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான துணை நடிகையின் புகாரை திரும்பப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை சாந்தினி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.இதையடுத்து, மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், இந்த வழக்கில் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருந்தனர். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மணிகண்டன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகை சாந்தினி சார்பில் இந்த புகாரை திரும்பபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, தனது புகழுக்கு களங்கம் விளைவித்ததாக மணிகண்டன் சார்பில் புகார் அளித்தால் என்னவாகும் என்று கண்டனம் தெரிவித்து மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Related Stories: