×

திருச்சி அருகே சுங்கச்சாவடியில் ஆதரவாளர்களுடன் சசிகலா திடீர் மறியல்: நள்ளிரவில் போக்குவரத்து பாதிப்பு

திருவெறும்பூர்: திருச்சி அருகே சுங்கச்சாவடியில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு சசிகலாவின் கார் கண்ணாடியில் ஸ்கேன் ஸ்டிக் மோதியதால் அவர் தனது ஆதரவாளர்களுடன் மறியலில் ஈடுபட்டார். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, விழுப்புரத்தில் இருந்து திருச்சி வழியாக தஞ்சாவூருக்கு காரில் நேற்றுமுன்தினம் சென்றார். அவரது ஆதரவாளர்கள் 4 கார்களில் முன்னும், பின்னும் சென்றனர். நள்ளிரவு 11.45 மணியளவில் ஆதரவாளர்களின் ஒரு கார் திருச்சி அடுத்த துவாக்குடி சுங்கச்சாவடியை கடந்து சென்றது. அதன்பிறகு சசிகலா கார் சென்றது. அப்போது அவரது கார் கண்ணாடியில் சுங்கச்சாவடி ஸ்கேன் ஸ்டிக் மோதியது. இதனால் டிரைவர், பிரேக் அடித்து காரை நிறுத்தினார். இதில் ஆத்திரமடைந்த சசிகலாவின் ஆதரவாளர்கள், தங்களது கார்களை அங்கேயே நிறுத்தி விட்டு கீழே இறங்கினர்.
இதை பார்த்து அங்கிருந்த ஊழியர் ஓடிவிட்டார். இதுபோன்று 3 முறை நடந்துள்ளதால், பழிவாங்கும் நோக்கில் நடக்கிறதா என்று சந்தேகப்படுவதாகவும், மேலாளர் உடனே வர வேண்டும் என்றும் அங்குள்ள ஊழியர்களிடம் சசிகலா கூறினார்.

மேலும், மேலாளர் வராவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று சசிகலா காரில் இருந்தபடியும், அவருடன் வந்த ஆதரவாளர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். நள்ளிரவு 1.15 மணி வரை நடந்த போராட்டத்தால் திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து திருவெறும்பூர் போலீசார் வந்து சசிகலாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சுங்கச்சாவடி மேலாளர் அமர்நாத்ரெட்டியும் வந்து பேசி மன்னிப்பு கேட்டார். எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர். அதற்கு சசிகலா தரப்பினர் புகார் கொடுப்பதாக தெரிவித்து விட்டு புறப்பட்டு சென்றனர். சசிகலா ஆதரவாளர்கள் கூறுகையில், துவாக்குடி டோல் பிளாசாவில் மட்டும்தான் இது மூன்றாவது தடவை சசிகலாவுக்கு நிகழ்ந்துள்ளது, போலீசில் முறைப்படி புகார் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.

கட்டணம் கட்ட மறுத்து சசிகலா தகராறு
சசிகலாவும் அவருடன் வந்த கார்களும் எப்போதும் சுங்க கட்டணம் கட்டுவதில்லை. ஒவ்வொரு முறையும் இலவசமாகவே பயணம் செய்கின்றனர். கேட்டபோதெல்லாம் தகராறு செய்கின்றனர். நேற்றும் அதேபோல அவருக்கு மட்டுமல்லாமல், அவரது காருக்கு முன்னும், பின்னும் செல்லும் கார்களும் இலவசமாக பயனம் செய்யும்படி கேட்டனர். மேலும் அதோடு டோல்கேட்டில் நிற்காமல் செல்வதற்காக ஏற்கனவே வரிசையில் முன்னால் நின்ற கார்களையும் இலவசமாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டனர். நாங்கள் கேட்டபோது மறுத்து தகராறில் ஈடுபட்டனர். இதனால்தான் சில வாகனங்களை நிறுத்துவதற்காக கேட் போட்டோம். இதற்காக சசிகலாவும் சேர்ந்து தகராறில் ஈடுபட்டார் என்று சுங்கச் சாவடி ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.



Tags : Sasikala ,Trichy , At the toll booth near Trichy Sasikala strikes with supporters: Traffic affected at midnight
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது