×

பத்திரப்பதிவுத்துறையில் பொறுப்பு உதவியாளர்கள் 5 பேர் அதிரடி மாற்றம்

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் சார்பதிவாளர் பொறுப்புகளை கவனிக்கும் உதவியாளர்கள் 5 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றும் மாவட்ட பதிவாளர்கள் மற்றும் சார் பதிவாளர்கள் பதிவு நேரங்களில் அடிக்கடி விடுமுறை போட்டு விட்டு செல்வதும், அவர்களுக்குப் பதில் உதவியாளராக இருப்பவர்கள் பொறுப்பாளராக இருந்து பத்திரப்பதிவுகளை கவனித்தும் வந்தனர்.

இதனால் பல இடங்களில் சார்பதிவாளர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதற்காகவே விடுமுறையில் செல்வதும், பொறுப்பு உதவியாளர்களை வைத்து பத்திரப்பதிவு செய்வதும் புகார்களாக வந்தன. இது குறித்து அமைச்சர் மூர்த்தி நடத்திய ஆய்விலும் தெரியவந்தது. இதனால் உதவியாளர்கள் 15 நாட்களுக்கு மேல் பொறுப்பாளர்களாக இருக்கக் கூடாது என்று அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து தென் சென்னை உதவி ஐஜி சத்தியப்பிரியா தனது எல்லைக்குள் இதுபோல் பொறுப்பு உதவியாளர்களாக உள்ள 5 பேரை நேற்று அதிரடியாக மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

இதில் படப்பை சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் எம்.ராதா, தென் சென்னை மாவட்டபதிவாளர்(நிர்வாகம்) அலுவலகத்திற்கும், தி.நகர் சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் மகாலிங்கம், தென் சென்னை இணை சார்பதிவாளர் அலுவலகத்திற்கும், இந்தப் பணியிடத்தில் இருந்த சங்கர், தென் சென்னை அசல் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கும், தென் சென்னை மாவட்ட பதிவாளர்(நிர்வாகம்) அலுவலக உதவியாளர் பிரபாகர், தி.நகர் சார்பதிவாளர் உதவியாளராகவும், கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் அலுவலக உதவியாளர் நெப்போலியன், சேலையூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Deeds Department, Responsible Assistants, Action Change
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை