×

இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் 2 லட்சமாவது மையம்: திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: இல்லம் தேடிக் கல்வி  திட்டத்தில் 2 லட்சமாவது மையத்தை, திருவாண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் பள்ளிகள் இயங்காமல் இருந்த நிலையில், பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதோடு கற்றல் இடைவெளியும் ஏற்பட்டதை சரி செய்திட தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித் துறையால் ‘இல்லம் தேடிக் கல்வி’ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், முதலியார்குப்பம் கிராமத்தில் 27.10.2021 அன்று தொடங்கி வைத்தார்.
 
இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 2 லட்சம் தன்னார்வலர்கள்  34 லட்சம் குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் கல்வி கற்பித்து வருகின்றனர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்களின் மாபெரும் ஆதரவு இத்திட்டத்தை வெற்றித் திட்டமாக மாற்றியுள்ளது. முதல்‌‌கட்டமாக 12 மாவட்டங்களில் தொடங்கப்பட்ட  இத்திட்டம் ஒரு மாதத்தில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. மேலும், வாசிப்பு பழக்கத்தை குழந்தைகளிடம் வளர்க்கும் நோக்கத்தில் 1000 இல்லம் தேடிக் கல்வி மைய நூலகங்கள் தொடங்கப்பட்டன.

ஒவ்வொரு நாளும் மாலை ஒன்றரை மணி நேரம் மாணவர்கள் மகிழ்வுடன் கற்கும் வகையில் இல்லம் தேடிக் கல்வி  மையங்கள் நடக்கின்றன. இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலைகளை கண்டறிய  அடிப்படை ஆய்வு நடத்தப்பட்டு, இதில் 18 லட்சம் மாணவர்களின் கற்றல் நிலைகள் ஆய்வு செய்யப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளன. இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில், ஜூன் 1 முதல் ஜூன் 12ம் தேதி வரை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் கூகுள் ரீட் அலாங் செயலி வழியாக குழந்தைகளுக்கான கதைகள் படிக்கும் போட்டி நடத்தப்பட்டது.

கோடை விடுமுறை காலத்தில் நடந்த இந்த நிகழ்வில் 18.36 லட்சம் குழந்தைகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இந்த‌ போட்டியில் பங்கேற்ற குழந்தைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் 263.17 கோடி சொற்களை வாசித்து உலக சாதனை புரிந்தார்கள். இந்த போட்டியில் 81.4 லட்சம் கதைகள் 9.82 லட்சம் மணி நேரத்திற்கு தொடர்ந்து வாசிக்கப்பட்டன. கூகுள் ரீட் அலாங் செயலி மூலம் வாசிப்பதில், உலகில் உள்ள பல்வேறு மொழிகளில் தமிழ் மாணவர்கள் முதலிடம் பெற்றுள்ளனர்.

இல்லம் தேடிக் கல்வி திட்டம், பெற்றோரிடத்திலும் மாணவர்களிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து 2022-23 நிதியாண்டில் மேலும் 6 மாதங்களுக்கு இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தொடக்கக் கல்வியில் அடிப்படை எண் அறிவையும் எழுத்தறிவையும் உறுதிப்படுத்தும் எண்ணும் எழுத்தும் என்ற மாபெரும் இயக்கத்திற்கு உறுதுணை புரியும் வகையில் இல்லம் தேடிக் கல்வி இரண்டு லட்சம் மையங்களாக  விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டின் ஒவ்வொரு குழந்தையின் கல்வியையும் உறுதி செய்வதில் இல்லம் தேடிக் கல்வி பேருதவி புரிகிறது.  

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், ஆராஞ்சி  ஊராட்சியில் இல்லம் தேடிக் கல்வி  திட்டத்தில் 2 லட்சமாவது மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும், இல்லம் தேடிக் கல்வி திட்டம்  தொடர்பான காணொளியையும், புகைப்பட விளக்க புத்தகத்தையும்  வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, தொடர் வாசிப்பு போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருச்சி லால்குடி வட்டாரம், மதுரை அலங்காநல்லூர் வட்டாரம், திருப்பத்தூர் மாவட்டம், மதுரை மாவட்டம் மேலூர் வட்டாரம் மற்றும் மதுரை மாவட்டத்துக்கு சுழற்கோப்பைகளையும் முதல்வர் வழங்கினார்.

விழாவில், அமைச்சர்கள்  எ.வ.வேலு, செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மகேஷ் பொய்யாமொழி, சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, எஸ்.அம்பேத்குமார் எம்.எல்.ஏ, பள்ளிக் கல்வித் துறை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார், திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ், இல்லம் தேடிக் கல்வி சிறப்புப் பணி அலுவலர் இளம்பகவத், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Tags : Chief Minister ,M.K.Stalin ,Tiruvannamalai , Home Search Education Programme, Thiruvannamalai, Principal M.K.Stalin
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்