×

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ரூ7.5 லட்சத்தில் நவீன ஓய்வறை

சென்னை: சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான புற நோயாளிகள் வந்து செல்கின்றனர். உள் நோயாளிகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு மருத்துவர்கள் சுழற்சி முறையில் வேலை பார்த்து வருகின்றனர். இரவு, பகலாக வேலை பார்க்கும் மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் வகையில்  ஆண் மற்றும் பெண் மருத்துவர்களுக்கான ஓய்வு அறை இயங்கி வருகிறது. குறிப்பாக பெண் மருத்துவர்கள் சிரமம் இல்லாமல் ஓய்வெடுப்பதற்கான ஓய்வு அறை உள்ளது. இவர்களுக்கான ஓய்வு அறையில் டிவி, டைனிங் டேபிள், மேசை மற்றும் ஏசி இருந்தது. தற்போது பெண் மருத்துவர்களின் வசதிக்காக, அந்த ஓய்வு அறை நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில்ரூ7.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மரத்தாலான குஷன் ஷோபாக்கள், இரண்டு மர படுக்கைகள், காபி டேபிள், எல்.இ.டி  டிவி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் கூறுகையில், ‘‘பெண் மருத்துவர்கள் சிரமம் இல்லாமல் ஓய்வெடுக்க நவீன வசதிகளுடன் ஓய்வு அறை சீரமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஆண் மருத்துவர்களின் வசதிக்காக இரண்டு ஓய்வு அறைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. பெண் மருத்துவர்களின் ஓய்வு அறை நட்சத்திர விடுதிக்கு இணையாக இருக்கிறது,’’ என்றார்.

Tags : Rajiv Gandhi Govt Hospital , Rajiv Gandhi Govt Hospital Modern Restroom at Rs 7.5 Lakhs
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...