×

சிதம்பரம் கோயிலில் அவமதிப்பு விவகாரம் வேறு இடத்தில் அமரும்படி சொன்னதற்கு மறுத்துவிட்டேன்: பேஸ்புக்கில் புதுவை கவர்னர் விளக்கம்

புதுச்சேரி: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன தரிசன திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். அப்போது, அவரை தீட்சிதர் ஒருவர் வேறு இடத்தில் அமரும்படி கூறி அவமதித்ததாக தகவல் பரவியது. மேலும், லட்டு பிரசாதம் வழங்கப்பட்ட தாளில் கவர்னரின் புகைப்படத்துடன் கூடிய செய்தி இடம் பெற்றிருந்தது. இந்த புகைப்படம் நேற்று சமூக வலைதளத்தில் வெளியானது. இதுபற்றி நெட்டிசன்கள் மீம்ஸ் வெளியிட்டனர்.

 இதற்கு பதிலளிக்கும் வகையில் கவர்னர் தமிழிசை தனது பேஸ்புக் பக்கத்தில், நடராஜரும்.... நானும்... இடையில்... நாரதர்கள் வேண்டாமே!!! என்ற தலைப்பில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் நடைபெற்ற ஆனி திருமஞ்சனத்துக்கு சென்றபோது நடந்த சுவையான சம்பவம்... 6ம் தேதி அதிகாலை 5 மணிக்கு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு சென்ற என்னை, திருமஞ்சனம் நிகழ்வை காண்பதற்காக கோயிலில் ஒரு இடத்தில் அமரச் செய்தார்கள். அபிஷேகத்துக்கு பின்பு இறைவனின் சந்தனம், மாலை போன்றவற்றை அளித்தார்கள்.

அருகில் அமர்ந்திருந்த பொதுமக்களிடம் பிரசாதத்தை பகிர்ந்து கொண்டேன். இடையில் ஒருவர் வந்து வேறு இடத்தில் அமர்ந்து கொள்கிறீர்களா? என்று கேட்டார். நான் மறுத்ததும் சென்றுவிட்டார். சொர்ணாபிஷேகம் நிறைவடைந்தவுடன் தீட்சிதர் ஒருவர் எனக்கு இரண்டு லட்டுகளை கொடுத்துவிட்டு இறைவனின் அருள் உங்களுக்கு முழுவதுமாக உள்ளது என்றார். எனக்கு ஒன்றுமே புரியாமல் அவரை பார்த்தேன். லட்டு மடித்திருக்கும் இந்த காகிதத்தில் என்னுடைய வண்ணப்படம் இடம்பெற்றிருந்த ஒரு செய்தித்தாள். நடராஜ பெருமான் அருளும் மானசீக ஆசிர்வாதமாக எனக்கு தோன்றியது. இது ஒரு சுவையான அனுபவம்... இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.


Tags : Chidambaram ,Governor ,Facebook , Chidambaram temple, defamation case, Facebook, Puduwa governor explanation
× RELATED சிஏஏ சட்டத்தை ரத்து செய்வோம் மோடியை...