×

இங்கிலாந்து எங்களுக்கு மிகவும் சவாலான அணியாக இருக்கும்: இந்திய கேப்டன் ரோகித்சர்மா பேட்டி

சவுத்தாம்டன்: இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அணி கடந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட 5வது மற்றும் கடைசி டெஸ்ட்டில் ஆடியது. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வென்று, தொடரை 2-2  என சமன் செய்தது. இதைத்தொடர்ந்து, தலா 3 டி20, ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. டி.20 தொடரின் முதல் போட்டி சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் இன்று இரவு 10.30க்கு தொடங்கி நடக்கிறது.

ரோகித்சர்மா தலைமையிலான அணியில் இஷான், சாம்சன், ஹூடா, கார்த்திக், அக்சர், ஹர்ஷல், புவனேஷ்வர், ரவி பிஷ்னோய், சூர்யகுமார், சாஹல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கோஹ்லி, ஷ்ரேயாஸ், பன்ட், ஜடேஜா, பும்ரா ஆகியோருக்கு முதல் போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து கேப்டனாக இருந்த மோர்கன் விலகியதால் புது கேப்டன் ஜோஸ் பட்லர் தலைமையில் அந்த அணி களம் காண்கிறது.

டேவிட் மலான், லிவிங்ஸ்டன், ஜேசன் ராய், கிறிஸ் ஜார்டன், தைமல் மில்ஸ், மொயீன் அலி ஆகியோர் அதிரடி காட்ட காத்திருக்கிறார்கள். சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த தொடர், ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கு ஒத்திகையாக இருக்கும். இரு அணிகளும் இதுவரை 19 டி.20 போட்டிகளில் மோதி உள்ளன. இதில் இந்தியா 10, இங்கிலாந்து 9ல் வென்றுள்ளன. கடைசியாக மோதிய 5 போட்டியில் இந்தியா 3ல் வென்றுள்ளது.

சவுத்தாம்டனில் இந்தியா இதுவரை டி.20 போட்டியில் ஆடியதில்லை. இங்கிலாந்து இங்கு 9 டி.20 போட்டிகளில் ஆடி 6ல் வெற்றி, 3ல் தோல்வி கண்டுள்ளது.
இதனிடையே இந்திய அணி கேப்டன் ரோகித்சர்மா நேற்று அளித்த பேட்டி: பர்மிங்காம் டெஸ்ட் போட்டியை வெளியில் இருந்து பார்ப்பது மிகவும் கடினமாக இருந்தது. போட்டிகளை தவறவிட்டால் அது எளிதான சூழ்நிலையாக இருக்காது. குறிப்பாக இதுபோன்ற ஒரு முக்கியமான ஆட்டத்தில் ஆடமுடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. ஏனெனில் டெஸ்ட் தொடர் எங்களுக்கு சாதகமாக இருந்தது.

கோவிட்டால் ஓரிரு நாட்கள் நான் கொஞ்சம் சிரமப்பட்டேன், ஆனால் தற்போது டி20, ஒருநாள் தொடரில் ஆட நான் நன்றாகவும் ஆரோக்கியமாகவும் மீண்டும் நிற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். திரும்பி வந்து விளையாடுவது எப்போதுமே நன்றாக இருக்கும். அதுதான் மிக முக்கியமான விஷயம். களம் இறங்குவதற்கும், இளம்வீரர்களுடன் பழகுவதற்கும் நான் உற்சாகமாக இருக்கிறேன். டி.20 உலகக் கோப்பையில் கண்டிப்பாக ஒரு கண் வைத்திருக்கிறோம். இதற்கு இது தயாரிப்பு என்று நான் சொல்லமாட்டேன். இந்தியாவுக்கான ஒவ்வொரு ஆட்டமும் எங்களுக்கு முக்கியம்.

நாங்கள் இங்கு வந்து, எங்களிடம் உள்ள ஒவ்வொரு வாய்ப்பையும் டிக் செய்து, வேலையைச் செய்து முடிக்க விரும்புகிறோம். நிச்சயமாக, நிறைய இளம் வீரர்கள் தங்கள் மாநில அணிகள், ஐபிஎல் அணிகளின் செயல்திறன் மூலம் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அவர்கள் தங்கள் வாய்ப்புக்கு தகுதியானவர்கள். இங்கிலாந்து எங்களுக்கு மிகவும் சவாலான அணியாக இருக்கும், என்றார்.

Tags : England ,Rohit Sharma , England will be a very challenging team for us: Indian captain Rohit Sharma Interview
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...