×

அம்பத்தூர் அருகே பரபரப்பு, 4 வயது சிறுவனை கொன்று பாழடைந்த கிணற்றில் வீச்சு!

அம்பத்தூர்: அம்பத்தூர் அருகே  4வயது சிறுவனை கொலை செய்து பாழடைந்த கிணற்றில் வீசிய  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் புருஷோத். இவரது மனைவி நீலாம்பரி. கடந்த 6 ஆண்டுக்கு முன்பு தமிழகம் வந்த இவர்கள், அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டை கச்சினாகுப்பம் பகுதியில்  தங்கினர். புருஷோத் அதே பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவர்களுக்கு 2 குழந்தைகள். தற்போது 3வதாக நீலாம்பரிக்கு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனால் நேற்று முன்தினம் இரவு முழுவதும் புருஷோத் மருத்துவமனையில் தங்கிவிட்டு, நேற்று காலை குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர் மூத்த மகன் பிரின்சிடம் (4) 10 ரூபாய் கொடுத்து சாக்லெட் வாங்கிகொள்ளும்படி கடைக்கு அனுப்பியுள்ளார்.  

வெகுநேரம் ஆகியும் பிரின்ஸ் வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த புருஷோத் பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் சிறுவனை கண்டுபிடிக்க முடியவில்லை. மதியம் ஒரு மணி அளவில் அதே பகுதியில் உள்ள அம்மா உணவகம் பின்புறம் உள்ள பாழடைந்த கிணற்றில் மகன் பிரின்ஸ் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பாழடைந்த கிணற்றில் மிதந்த சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவன் சடலம் கிடந்த கிணற்றின் சுற்றுச்சுவர் 9 அடி உயரம் இருந்ததாலும், சுற்றுச்சுவர்மீது  சிறுவனால்  ஏற முடியாது என்பதாலும் சிறுவன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் சிறுவனை யாராவது கொலை செய்து பாழடைந்த கிணற்றில் வீசினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் அம்பத்தூர் அருகே பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Ampathur , Excitement near Ampathur, a 4-year-old boy was killed and thrown into a dilapidated well!
× RELATED வீடியோ ஆதாரத்துடன் போலீசில் புகார்;...