×

கொடைக்கானலில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி துவங்கியது

கொடைக்கானல்:கொடைக்கானலில் வனக்கோட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல்  வனக்கோட்டத்தில் உள்ள 7 வனச்சரகங்களிலும்  வருடந்தோறும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடக்கும். கொரோனா பரவல்  காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கணக்கெடுப்பு பணி நடக்கவில்லை. இந்த  ஆண்டு கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, 7 வனச்சரகங்களிலும் வனவிலங்குகளை  கணக்கெடுக்கும் பணி நேற்று துவங்கியது. வனச்சரகர் தலைமையில்  வனவர்கள், வனப்பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர்  இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 9 குழுக்கள் இந்த கணக்கெடுப்பு  பணியில் ஈடுபட்டுள்ளன.

 நேற்று தொடங்கிய இந்த கணக்கெடுப்பு பணி தொடர்ந்து ஒரு  வாரம் நடக்கும். தேவைப்பட்டால் மேலும் சில நாட்கள் கணக்கெடுக்கும் பணி  நடக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த கணக்கெடுப்பு பணி மூலம்  கொடைக்கானல் வனக்கோட்டத்தில் வசிக்கும் யானைகள், காட்டு மாடுகள், மான்கள்,  கேளை ஆடுகள், சருகு மான்கள், புலிகள், சிறுத்தைகள், குரங்குகள்,  செந்நாய்கள், கழுதைப்புலிகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகளின்  எண்ணிக்கை குறித்து தெரியவரும். வனவிலங்குகளை பார்த்தும், அதன்  காலடி தடங்களை அளவீடு செய்தும் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.  கொடைக்கானல் வனகோட்ட மாவட்ட வன அலுவலர் திலீப் தலைமையில் இந்த  பணிகள் கண்காணிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Kodaikanal , Wildlife in Kodaikanal Survey work has started
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்