×

உருண்டு புரண்டு அண்ணாமலை வந்தாலும் பாஜ மீதான மக்கள் கோபம் கடுகளவும் குறையாது: கே.எஸ்.அழகிரி ஆவேசம்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்த பாஜவுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ள கே.எஸ்.அழகிரி, உருண்டு புரண்டு அண்ணாமலை வந்தாலும் பாஜ மீதான மக்கள் கோபம் கடுகளவும் குறையாது என்று கூறியுள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் ஒட்டுமொத்த நலனுக்கு எதிராக ஒன்றிய பாஜ அரசு செயல்படுவதால் தொடர்ந்து 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், அதைத் தொடர்ந்து ஊரக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களிலும் திமுக  தலைமையிலான, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணிக்கு அமோக ஆதரவை வழங்கி வெற்றி மேல் வெற்றியை மக்கள் வழங்கி வருகிறார்கள்.

 தமிழக பாஜவை அனைத்து தேர்தல்களிலும் முற்றிலும் நிராகரித்து வருகிறார்கள். இதன்மூலம் தமிழக பாஜவின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறிவிட்டது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டுகளில் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிற வகையில் மகத்தான சாதனைகளை புரிந்து வருகிறது. இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிற வகையில் நாள்தோறும் சாதனை பட்டியல்களை படைத்து வருகிறது. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட ரூ.5.5 லட்சம் கோடி கடனை சுமந்து கொண்டு தான் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.

அத்தகைய கடன் சுமையின் பின்னணியில் தான் வெளியிடப்பட்ட 2875 கொள்கை ரீதியிலான அறிவிப்புகளில் 87 சதவீதத்திற்கும் மேலான அறிவிப்புகள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதேபோல, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட 505 வாக்குறுதிகளில் பாதிக்கு மேல் நிறைவேற்றப்பட்டுள்ளன. இப்படி இருக்கும் போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கு பாஜவிற்கு என்ன தகுதி இருக்கிறது?. நேற்று நடைபெற்ற பாஜ போராட்டத்தில் 2 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு தருவதாக தி.மு.க. கூறி 15 மாதங்களில் எந்த வேலை வாய்ப்பையும் ஏற்படுத்தவில்லை என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து காழ்ப்புணர்ச்சியோடு அண்ணாமலை பேசியிருக்கிறார்.

கடந்த ஓராண்டு காலத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட 124 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 1 லட்சத்து 90 ஆயிரம் பேர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 4 ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில்  ரூபாய் ஒன்னேகால் லட்சம் கோடி முதலீட்டில் 60 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு 75 ஆயிரம் பேருக்கு வேலை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன் என்று பிரதமர் மோடி வாக்குறுதி வழங்கினார். ஆனால், 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் தற்போது தலைவிரித்தாடி வருகிறது.

தவறான ஜி.எஸ்.டி. மூலம் மக்களை பாஜ அரசு கசக்கிப் பிழிந்து வருகிறது. திமுக நிறைவேற்றாத கோரிக்கைகளுக்காக கன்னியாகுமரியிலிருந்து கோபாலபுரத்திற்கு பாத யாத்திரை நடத்தப் போவதாக அண்ணாமலை கூறுகிறார். அண்ணாமலை பாத யாத்திரை நடத்தினாலோ, அல்லது கன்னியாகுமரியிலிருந்து உருண்டு, உருண்டு கோபாலபுரம் வந்தாலும் தமிழகத்தில் பாஜ மீது மக்களுக்கு இருக்கிற வெறுப்பு கடுகளவும் குறையாது. எனவே, தமிழகத்தில் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டம் நடத்துகிறோம் என்று கூறி இரட்டை வேடம் போடுவதை தமிழக பாஜ நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Tags : Baja ,Annamalai ,K. S.S. , Even if Annamalai comes rolling, people's anger against the BJP will not diminish: KS Azhagiri Avesam
× RELATED தேர்தல் விதியை மதிக்கிறதே இல்ல…...