ஆலந்தூர்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்பி நிதியில் இருந்து ரூ.62.59 லட்சம் மதிப்பீட்டில் ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர் பகுதிகளில் அமைக்கப்பட்ட 3 பேருந்து நிலையம், 4 இடங்களில் உயர் கோபுர மின்விளக்கு ஆகியவற்றை இயக்கிவைக்கும் விழா நடைபெற்றது.
விழாவுக்கு ஆர்.எஸ்.பாரதி எம்பி தலைமை வகித்தார். மண்டல குழு தலைவர் என்.சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் நாஞ்சில் பிரசாத், சாலமோன், பிருந்தா, முரளிகிருஷ்ணன், பூங்கொடி, ஜெகதீஸ்வரன், துர்காதேவி நடராஜன், தேவி ஏசுதாஸ் முன்னிலை வகித்தனர். இதில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு ஆலந்தூர் நீதிமன்றம், பழவந்தாங்கல், கிருஷ்ணசாமி தெரு, நங்கநல்லூர் இந்து காலனி போன்ற பகுதிகளில் அமைக்கப்பட்ட 3 நவீன நிழற் குடைகளை திறந்துவைத்தார்.
ஆலந்தூர் எம்.கே. சாலை, கடும்பாடி அம்மன் கோயில், ஈஸ்வரன் கோயில் தெரு, ஆதம்பாக்கம் சாந்தி நகர், பாண்டுரங்கன் கோயில், நங்கநல்லூர், தர்மலிங்கேஸ்வரர் கோயில் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின்விளக்குகளை இயக்கிவைத்தார்.