×

சேவல் சண்டையில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது; 19 பைக் பறிமுதல்

பல்லாவரம்: பல்லாவரம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பல்லாவரம் அருகே திருநீர்மலை ஏரிக்கரை பகுதியில் நேற்று மாலை ஏரிக்கரையில் ஒரு கும்பல் சட்டவிரோதமாக பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுவதாக சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போலீசாரை வருவதை அறிந்து கும்பலில் பலர் தப்பியோடி விட்டனர். அதில் 6 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் திருநீர்மலை அருண் (21), பம்மல் கவுதம் (22), சென்னை ராயப்பேட்டை கோகுல் (25), திருவள்ளூர் நந்தகுமார் (21), தர் (24), கோவிலம்பாக்கம் விஷ்ணுதாஸ் (23) எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் சட்டவிரோத சேவல் சண்டையில், எந்த கோழி ஜெயிக்கும் என பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதுகுறித்து சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 19 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட சண்டை சேவல்களை கிண்டி, புளூகிராஸ் அமைப்பிடம் போலீசார் ஒப்படைத்தனர். தப்பியோடிய நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : 6 people arrested for betting money on cockfights; 19 bike confiscation
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...