மதுரை: மதுரை உசிலம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்ற வியாபாரியிடம் மர்மநபர் ஒருவர் நூதன முறையில் ரூ.1.40 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றார். கீழே பணம் கிடப்பதாக மர்மநபர் கூறியதை நம்பிய அந்த வியாபாரி பெரும் தொகையை பரிதாபமாக இழந்துள்ளார். மதுரை மாவட்டம் மலைபட்டியை சேர்ந்த பால்ராஜ் என்பவர் பெங்களூரில் முறுக்கு தயாரிப்பு நிறுவனம் வைத்துள்ளார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த இவர், உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் உள்ள கனரா வங்கியில் தன்னிடம் இருந்த தகச்செயினை அடகுவைத்து விட்டு, ரூ.1.40 லட்சத்தை பெற்றுள்ளார்.
அந்த பணத்தை அவர் தனது இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய தனியார் மையத்திற்கு சென்றுள்ளார். அவரை பின்தொடர்ந்து வந்த மர்மநபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் இருந்து பணம் கீழே விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதை நம்பிய பால்ராஜ், வாகனத்தை நிறுத்திவிட்டு, சென்று பார்த்தபோது ரூ.70 இருப்பதை அறிந்து அதை எடுக்க முயன்றுள்ளார். இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.40 லட்சத்தை அந்த மர்மநபர் எடுத்துவிட்டு தப்பியோடினார்.