நெல்லை: பாஜ சார்பில் நெல்லையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்று கூறினார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் பாஜ சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பாஜ சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில் ‘‘ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டமானது நிர்வாக வசதிக்காக தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது போல் மாநில அரசின் நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை ஆந்திரா போன்று இரண்டாகப் பிரிக்க வேண்டும்.
இதனால் ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசு அதிக அளவில் நிதி பெற முடியும். தலா 117 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டு இரண்டு மாநிலங்கள் உருவாக்கலாம். நிர்வாக வசதிக்காக பாண்டிய நாடு, பல்லவ நாடு எனப் பிரிக்கலாம். தமிழ்நாட்டை பிரிக்க முடியாது என்று மட்டும் நினைக்க வேண்டாம். ஏனென்றால் நாங்கள் அதற்கான இடத்தில் இருக்கிறோம். பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது’’ என்றார்.