சென்னை : அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளார் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.வானகரத்தில் கடந்த ஜூன் 23ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பூதாகரமாக வெடித்தது. இக்கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த 23 தீர்மானங்களை பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்தனர். இதனால், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேறினர். அன்றைய தினம் தற்காலிக அவைத்தலைவராக இருந்த தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என அறிவித்தார்.
இந்த நிலையில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பொதுக்குழுவில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. ஜெயலலிதாவிற்கு பாரத ரத்னா விருது வழங்கும் தீர்மானம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கும் தீர்மானம் உள்ளிட்டவை நிறைவேற்றப்பட உள்ளன. கடைசியாக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக மட்டுமே எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார். அதன்படி தொண்டர்கள் மூலம் வாக்குகள் செலுத்தப்பட்டு அவர் நிரந்தர பொதுச்செயலாளர் ஆவார். இதன் மூலம் அவரின் பதவிக்கு சட்ட ரீதியாக பலமான சப்போர்ட் கிடைக்கும். அத்துடன் மாவட்ட அளவில் தீர்மானங்களை நிறைவேற்றி, வட்ட அளவிலும் தீர்மானங்களை நிறைவேற்றி, எடப்பாடிக்கு ஆதரவாக எல்லா மாவட்டங்களிலும் வாக்கெடுப்பு நடத்தி அதன்பின் எடப்பாடி பழனிசாமி நிரந்தர பொதுச்செயலாளர் என்று அறிவிக்கப்படுவார்.