திருவண்ணாமலை: பழங்குடியினர் சாதிச்சான்று கேட்டு திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு குருமன்ஸ் இன மக்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குருமன்ஸ் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ST குருமன்ஸ் பழங்குடியினர் சாதி சான்று வழங்கக்கோரி, கடந்த 2014ம் ஆண்டு முதல் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சுமார் 300 பேர் திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் வருவாய்துறை அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை மேற்கொண்டும் தோல்வி அடைந்த நிலையில், விடிய விடிய காத்திருப்பு போராட்டம் தொடர்ந்தது. பள்ளிகள் திறந்த நிலையில், மாணவர்கள் சாதி சான்றிதழ் இல்லாமல் அவதிப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனிடையே தங்களுக்கு ST குருமன்ஸ் பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கூறி, 300-க்கும் மேற்பட்ட குருமன்ஸ் இன மக்கள் கோட்டாட்சியர் அலுவலகத்திலேயே காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டனர். அங்கேயே இரவு உணவு சாப்பிட்டும், படுத்து உறங்கியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.