வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே, சாலையோரம் குவிக்கப்படும் நூற்பாலைக் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், நாகம்பட்டி ஊராட்சியில் உள்ள திண்டுக்கல் செல்லும் தேசிய சாலையில் எவரடி மில் பஸ்நிறுத்தம் அருகே, அப்பகுதியில் உள்ள நூற்பாலைகளிலிருந்து வரும் குப்பைகளை சாலையோரம் குவிக்கின்றனர்.
இதனால், அந்த பகுதி பெரும் குப்பை கிடங்காக மாறி துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. இப்பகுதியில் குப்பையை கிளறும் பன்றிகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இவைகள் வாகன ஓட்டிகள் குறுக்கே வந்து விபத்தை ஏற்படுத்துகின்றன. எனவே, ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.