நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் குறுவை நடவு பணி மும்முரமாக நடை பெறுகிறது.திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நீடாமங்கலம் வேளாண் கோட்டத்தில் 52 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உள்ளது. இதில் 50 ஆயிரம் ஏக்கர்களில் வேளாண் சார்ந்த பணிகளை விவசாயிகள் செய்து வந்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் மே மாதம் 24ம் தேதி மேட்டூர் அணையை திறந்து வைத்ததன் மூலம் பாசன நிலங்களுக்கு தண்ணீர் சென்றடைந்ததால் டெல்டா மாவட்டங்களில் குறுவை விவசாயப் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.
கடந்த ஆண்டு 17,500 ஏக்கரில் சம்பா சாகுபடியும், 26 ஆயிரம் ஏக்கரில் தாளடி சாகுபடியும் விவசாயிகள் மும்முரமாக தொடங்கி முடிந்துள்ளது.இதில் 1,800 ஏக்கரில் தென்னை சாகுபடியும், 100 ஏக்கரில் காய்கறி சாகுபடியும், 50 ஏக்கரில் மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட சிறு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில் நீடாமங்கலம் தாலுக்கா பகுதியில் இந்த ஆண்டு சுமார் 6,000 ஏக்கரில் நிலத்தடி நீரில் மின் மோட்டாரை பயன்படுத்தி கோடை சாகுபடி செய்து தற்போது அறுவடை பணிகள் நடை பெற்று வருகிறது.
சில விவசாயிகள் நிலத்தடி நீரை பயன்படுத்தி முன்கூட்டியே கடம்பூர், பரப்பனாமேடு, சித்தமல்லி மேல்பாதி, பூவனூர், அனுமந்தபுரம், பெரம்பூர், காளாச்சேரி, மேலபூவனூர், கானூர், பூவனூர் தட்டிதெரு, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய வளாகத்தில் உள்ள வயல்கள் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குறுவை நடவு சாகுபடியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர்.