ஜோலார்பேட்டை : ஏலகிரி மலையில் வார விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் பல்வேறு பொழுது போக்கு இடங்களை கண்டு களித்து மகிழ்ச்சி அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்று ஏலகிரி மலையும் ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்பட்டு பல்வேறு பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கிறது.
மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் வார விடுமுறை நாட்களில் ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் கோலாகலமாக காணப்படுகிறது. மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குவதற்கான அரசு தங்கும் விடுதி தனியார் விடுதிகள் ரிசார்டுகள் போன்றவைகள் அதிக அளவில் உள்ளதால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள், அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த ஊழியர்கள் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஏலகிரி மலையில் தங்கி இங்குள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பொழுதுபோக்கு கூடங்களை கண்டு களித்து செல்கின்றனர்.
இந்நிலையில் வார விடுமுறையான நேற்று ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். மேலும் இங்குள்ள படகு துறையில் குடும்பத்துடன் படகில் சவாரி செய்தும் சிறுவர் பூங்காவில் உள்ள சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்களில் ஒன்று கூடி விளையாடி மகிழ்ந்தும் இயற்கை பூங்காவில் உள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்தும் சென்றனர்.
மேலும் இங்குள்ள தனியார் பொழுதுபோக்கு கூடங்களில் தங்களது குழந்தைகளை சிறிய தண்ணீர் தொட்டியில் குழந்தைகளை படகில் சவாரி செய்தும், வைல்டு தீம்ஸ் பார்க்கில் கடல் போன்ற அலை நீர் தொட்டியில் குளிக்கும் சேர்க்கை அருவி போன்ற நீர் தொட்டியில் விளையாடும் மகிழ்ந்தனர். மேலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகாரித்ததால் ஏலகிரி மலையில் உள்ள காவல் நிலையம் சார்பில் போலீசார் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.