சென்னை: பூந்தமல்லியின் பல பகுதிகளில் வி.கே.சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பூந்தமல்லி குமணன்சாவடிக்கு நேற்று வந்த அவருக்கு பூவை து.கந்தன் தலைமையில் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், வேனில் அமர்ந்தவாறே சசிகலா தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:
உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் இடைத்தேர்தலில் தனிப்பட்ட சிலரின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட முடியாத சூழலில் வேதனை அளிக்கிறது. அதிமுகவிற்கு ஒற்றை தலைமை கண்டிப்பாக வேண்டும். அதே சமயத்தில் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற தலைமையாக, தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற தலைமையாக இருக்க வேண்டும். பண பலமும், படை பலமும் ஒரு தலைமையை தீர்மானிக்க முடியாது. மக்கள் பலமும், தொண்டர் பலமும் தான் ஒரு தலைமையை தீர்மானிக்கும். தனக்கு ஆதரவாக சிலரை பேச வைத்து விட்டு நான் தான் தலைமை என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு வலுக்கட்டாயமாக நாற்காலியை பிடித்து கொண்டு இருந்தால் தலைவராக ஆகிவிட முடியாது.