×

அனைத்து கிராமங்களுக்கும் கூடுதலாக விநியோகம் செய்ய ரூ.4600 கோடியில் 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம்: வடிவமைப்பு பணிகள் தீவிரம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும், கூடுதலாக ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் வழங்க 2ம் தொகுப்பு ₹4600 கோடியில் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டத்திற்காக அலுவலக ரீதியான திட்ட வடிவமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், புளோரைடு கலந்த குடிநீரை குடித்ததால், பொதுமக்கள் கரை படிந்த பற்கள், முடக்குவாதம், மூட்டுவலி போன்ற இன்னல்களுக்கு ஆளாகினர். இந்த பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க, கடந்த திமுக ஆட்சி காலத்தில், ₹1928.80 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய துணை முதல்வராக இருந்த, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜப்பான் நாட்டிற்கு சென்று நிதியை பெற்று வந்தார். 2008ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி, அப்போதைய முதல்வர் கருணாநிதி, இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த திட்டத்தை 2012ம் ஆண்டுக்குள் நிறைவேற்றி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், இடையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், இத்திட்டத்தில் தொய்வு ஏற்பட்டது. பின்னர், திட்டத்தை நிறைவேற்றாமல், அவசர கதியில் கடந்த 2013ம் மார்ச் 19ம் தேதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகரப்பகுதி மற்றும் சில கிராமங்களில் மட்டும், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் சென்றடைந்தது. ஊரக பகுதிகளில் இத்திட்டம் முழுமையாக சென்றடையவில்லை. இதனால் ஊரக பகுதிகளில் உள்ள கிராம மக்கள், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் கிடைக்காமல், ஆழ்துளை கிணறுகளை நம்பியிருக்கும் நிலை உள்ளது. தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்து கிராமங்களுக்கும், ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் குடிநீர் வழங்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் ₹4600 கோடியில் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். இதனால், இரு மாவட்ட மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். தற்போது 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டத்திற்கான திட்ட வடிவமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் சில கிராமங்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை என புகார் வருகிறது. இதையடுத்து, தமிழக முதல்வர் ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்டம் 2ம் தொகுப்பாக ₹4600 கோடியில் நிறைவேற்ற அறிவித்துள்ளார். இதற்கான வடிவமைப்பு பணிகள், அலுவலக ரீதியாக தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது ஒரு நபருக்கு 30 லிட்டர் தண்ணீர் வழங்கப்படுகிறது. 2ம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டால், சராசரியாக ஒரு நபருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும் முழுமையாக குடிநீர் கிடைக்கும்,’ என்றனர்.


Tags : Okanagan , ₹4600 crore Phase 2 Okanagan Integrated Drinking Water Project for additional supply to all villages: Design work in full swing
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி