×

தாளவாடி மலைப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை கூண்டில் சிக்கியது

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. வனப்பகுதியில் வசிக்கும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி இரவு நேரங்களில் விவசாய தோட்டங்களில் புகுந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு, மாடு, நாய் உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவது தொடர் கதையாக உள்ளது.இந்நிலையில், தாளவாடி அருகே உள்ள ஓசூர் கிராமத்தில் செயல்படாத கல்குவாரி பகுதியில் பதுங்கிய சிறுத்தை அப்பகுதியில் கால்நடைகளை வேட்டையாடி வந்தது. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தாளவாடி வனத்துறையினர் ட்ரோன் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்தனர்.மேலும், சிறுத்தையை பிடிப்பதற்காக அப்பகுதியில் கூண்டு வைத்தனர். தினமும் இரவில் வனத்துறையினர் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

இந்நிலையில், கல்குவாரி பகுதியில் பதுங்கி இருந்த சிறுத்தை நேற்று காலை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.தகவல் அறிந்த தாளவாடி வனச்சரக அலுவலர் சதீஷ் சம்பவ இடத்திற்கு சென்று கூண்டில் சிக்கிய சிறுத்தையை பார்வையிட்டார். கால்நடை மருத்துவர் மூலம் சிறுத்தையை பரிசோதித்ததில் சுமார் மூன்று வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை என்பது தெரியவந்தது. கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியதால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

தெங்குமரஹாடா வனத்தில் விடுவிப்பு
சிறுத்தையை வனப் பகுதிக்கு கொண்டு சென்று விடுவதற்கான முயற்சியில் ஆசனூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா தலைமையில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது கூண்டில் சிக்கிய சிறுத்தைக்கு, வன கால்நடை மருத்துவர் சதாசிவம் மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதிக்கு கொண்டு செல்வதற்காக ஆயத்த பணிகள் நடைபெற்றது.வேறொரு கூண்டிற்கு சிறுத்தையை மாற்ற முயற்சித்த போது திடீரென எதிர்பாராத விதமாக சிறுத்தை கூண்டை விட்டு வெளியேறி தப்பி ஓடியது. இதை கண்ட வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.இதைத்தொடர்ந்து, அருகே உள்ள புதர்களில் சிறுத்தை பதுங்கியுள்ளதா? என வனத்துறையினர் சிறுத்தையை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் போராடி சிறுத்தையை கண்டுபிடித்து மீண்டும் கூண்டில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து சிறுத்தையை பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர்.



Tags : Thalawadi , In the Talawadi hills Hunted cattle The leopard was trapped
× RELATED சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை..!!