×

திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் திருக்கோயிலில் விரைவில் குடமுழுக்கு நடைபெறும் : அமைச்சர் சேகர்பாபு தகவல்!!

சென்னை : தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்னை, திருவான்மியூர் அருள்மிகு பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகள் திருக்கோயிலில் இன்று (01.07.2022) மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் திரு. தா.மோ.அன்பரசன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஆய்வு மேற்கொண்டார்கள்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தாவது, சென்னை, திருவான்மியூரில் உள்ள அருள்மிகு பாம்பன் குமரகுருதாசர் சுவாமிகள் திருக்கோயில் என வழங்கும் மயுரநாதர் திருக்கோயிலை, நிர்வாகம் செய்துவந்த காலஞ்சென்ற டி.டி.குப்புசாமி செட்டியார் அவர்கள் தானாக முன்வந்து இத்துறையிடம் ஒப்படைத்தார். அன்று முதல் இன்றுவரை நிர்வாக அதிகாரி நியமனம் செய்யப்பட்டு நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை உதவி ஆணையர் அவர்கள் தக்காராக செயல்பட்டு வருகிறார்.  

இத்திருக்கோயிலில் தினசரி நான்கு கால பூஜைகள் மற்றும் மாதந்தோறும் பௌர்ணமி, கிருத்திகை, சஷ்டி ஆகிய நாட்களில் பூஜைகள் நடைபெற்று வருகிறது. அன்னதான திட்டம் மூலம் தினசரி 300 நபர்களுக்கும் விசேஷ தினங்களில் 500 நபர்களுக்கும் திருவிழா காலங்களில் 800 நபர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 1988 ஆம் ஆண்டு பாலாலயம் செய்யப்பட்டு சில விக்ரகங்கள் தானிய வாசத்தில் வைக்கப்பட்டுள்ளது. கருவறை மற்றும் மண்டபம் உபயதாரர் மூலம் கட்டப்பட்டது. தற்போது இத்திருக்கோயிலுக்கு உயர்நீதிமன்ற உத்தரவுபடி திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு விரைவில் நடைபெறும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., உதவி ஆணையர்கள் திரு.பாஸ்கரன், திரு.ஹரிஹரன், திருக்கோயில் அலுவலர்கள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


Tags : Thiruvanmiyur ,Bomban Swami temple ,Minister ,Shekhar Babu , Thiruvanmiyur, Pamban, Swamikal, Thirukoil
× RELATED தனது ஜனநாயக கடமையை ஆற்ற முதல் ஆளாக வருகை தந்த நடிகர் அஜித்!