ஐதராபாத்: ஐதராபாத்துக்கு நாளை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து விளம்பர பலகைகள் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய செயற்குழு கூட்டம் தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதால் அங்கு பலத்த ஏற்பாடுகளை பாரதிய ஜனதா கட்சியினர் செய்து வருகின்றனர். பிரதமர் வருகையையொட்டி 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பை பை மோடி என்று எழுதப்பட்ட விளம்பர பலகைகளும், பேனர்களும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்தன. தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் பிரதமர் மோடி வரும்போதெல்லாம் GOBACKMODI என சமூக வலைத்தளங்களில் டிரண்ட் செய்யப்படுவது வழக்கம். தெலுங்கானா மாநிலத்திலும் முதல்வர் சந்திரசேகர ராவ் மோடி எதிர்ப்பாளராக ஈடுபட்டுள்ள நிலையில், மோடி வருகையையொட்டி அவருக்கு எதிராக விளம்பர பலகைகள் வைக்கப்பட்டது ஐதராபாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே மோடி எதிர்ப்பு பேனர்களை அரசு அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.