சென்னை: ரயில் மூலம் சென்னை வந்த கோவில்பட்டி கருவாடு வியாபாரியிடம் ரூ.78 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் தெற்கு கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலமுரளி (53). நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைந்தார். கையில் கருப்பு கலர் பையுடன் இருந்த அவரை சந்தேகத்தின் பேரில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நிறுத்தினர். பிறகு அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், அவரிடம் கட்டுக்கட்டாக பணம் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தான் கருவாடு விற்பனை செய்வதாகவும் கருவாடு விற்பனை செய்த பணம்தான் இவை என்றும் தெரிவித்தார். பின்னர், எந்தவித ஆவணமுமின்றி ரயிலில் கொண்டுவரப்பட்ட ஹவாலா பணம் ரூ.78 லட்சத்து 75 ஆயிரத்தை பறிமுதல் செய்த ஆர்பிஎப் போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.