சென்னை: கடந்த 2002-06ம் ஆண்டில் வீட்டுவசதி துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை 2006ல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது சட்டவிரோத பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரியில் அமலாக்கத்துறை முடக்கியது.
இதையடுத்து, அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் பரேஷ் உபாத்யாய், ஜெகதீஷ் சந்திரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கப் பிரிவு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்று நீதிபதிகள், அமலாக்கத்துறை விளக்கம் அளிக்க ஜூலை 14ம் தேதி வரை அவகாசம் வழங்கினர். அதுவரை அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்குக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.