திருவள்ளூர்: தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க, பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பாக திருவள்ளுர் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற “நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படும் “கல்லூரி கனவுகள்” திட்டத்தின் மூலம் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். எம்எல்ஏ க்கள வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, ச.சந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதன்மைக்கல்வி அலுவலர் த.இராமன் அனைவரையும் வரவேற்றார். உயர் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது,வருகின்ற கால கட்டத்தில் மாணவர்களாகிய நீங்கள் மற்றவர்கள் பேர் சொல்லும் அளவிற்கு உங்களுக்கான கல்வித் தரத்தையும், தகுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக முதல்வர் உங்களுக்காக அனைத்து திட்டங்களையும் தீட்டி செயல்படுத்தி வருகிறார். இதற்கு உதாரணமாக அமெரிக்க ஜனாதிபதி நடிகர் ரீகன் வாழ்க்கை வரலாற்றையும், ஆபிரகாம்லிங்கன் வரலாற்றையும், தாமஸ் ஆல்வா எடிசன் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்கள் எப்படி வாழ்க்கையில் சாதித்து பெரிய பதவிகளில் அமர்ந்தார்கள் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் பெற்றோரும் ஆசிரியரும் மாணவர்கள் வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். திருவள்ளூர் மாவட்ட பள்ளி மாணவர்கள் அகில உலக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைக்க வேண்டும். அதற்காக தங்களின் கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ளவேண்டும் என்றார். “நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படும் கல்லூரி கனவுகள்” என்ற வழிகாட்டுதல் கையேடுகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார்.