×

டிஎஸ்-இஓ புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் நாளை விண்ணில் பாய்கிறது

சென்னை: டிஎஸ்-இஓ என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளுடன் பிஎஸ்எல்வி சி -53 ராக்கெட்டை இஸ்ரோ நாளை விண்ணில் ஏவுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளில் செயற்கைகோள்களை பொருத்தி அவற்றை விண்ணில் ஏவி வருகிறது.

இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து நாளை மாலை 6 மணிக்கு பி.எஸ்.எல்.வி. சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுகிறது. இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் விண்ணில் பாய்கிறது.  ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுன்ட் டவுன் இன்று மாலை 5 மணிக்கு துவங்குகிறது.

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டில் 365 கிலோ எடை கொண்ட டிஎஸ்-இஓ எலக்ட்ரோ-ஆப்டிக் செயற்கைகோள் என்ற புவி கண்காணிப்பு செயற்கைகோளும் அதனுடன்  சிங்கப்பூரின் மற்றொரு செயற்கைகோளான 155 கிலோ எடை  கொண்ட என்இயு-சாட் மற்றும் 2.8 கிலோ எடையுள்ள  ஸ்கூப் 1 உள்பட 3 செயற்கைகோள்கள் விண்ணில் ஏவப்படுகின்றன.

இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் பி.எஸ்.எல்.வி. ரகத்தில் 16வது ராக்கெட் இதுவாகும். டிஎஸ்-இஓ செயற்கைகோள் அதிக தெளிவுதிறன் மற்றும் ஒரே நேரத்தில் பல கோணங்களில் பூமியை படம் எடுக்கும் வசதி கொண்டது.

இது கடல்சார் பாதுகாப்பு, பேரிடர் மீட்பு, பேரிடர் மீட்பிற்கு தேவைப்படும் மனித வளங்களை கண்டறிவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். 44.4 மீட்டர் உயரம் கொண்ட இந்த ராக்கெட் பூமியில் இருந்து 570 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது

Tags : Earth , PSLV C-53 rocket launches tomorrow with DS-EO Earth observation satellite
× RELATED முடிவற்ற காலத்தின் எல்லையற்ற பரம்பொருள்