ஆலந்தூர்: ஆலந்தூர் 160வது வார்டுக்கு உட்பட்ட மாதவபுரத்தில் கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியவில்லை என மின்வாரிய புகார்கள் எழுந்தன. இதுகுறித்து 160வது வார்டு கவுன்சிலர் பிருந்தா, மின்சார வாரிய அலுவலகத்தில் கேட்டபோது, மின்தடை எதுவும் செய்யவில்லை என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, கவுன்சிலர் பிருந்தா, திமுக வட்ட செயலாளர் முரளி கிருஷ்ணன் ஆகியோர் மின்வாரிய ஊழியர்களுடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டனர்.
அப்போது மர்ம நபர்கள் தெருவிளக்கு மின் கம்பங்களில் உள்ள ப்யூஸ் கேரியரை கழட்டி வைத்துவிட்டு தப்பியது தெரியவந்தது. அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் தெருவிளக்குகளை அணைக்கும் மர்ம நபர் குறித்து சிசிடிவி கேமரா உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக கவுன்சிலர் பிருந்தா தெரிவித்துள்ளார்.