×

உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்; ஜி7 அமைப்பு கண்டனம்!!

கீவ்: உக்ரைன் மாலில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.  உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் 4 மாதங்களை கடந்துள்ளது. உக்ரைனின் மரியுபோல், கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷ்ய படையினர் கைப்பற்றி உள்ளனர். தற்போது கிழக்கு உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ள கிரமென்சுக் தொழில்துறை நகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த மாலில் ரஷ்யா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 1000த்திற்கும் மேற்பட்டோர் உள்ளே இருந்த நிலையில், மால் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

இந்த தாக்குதலில் மாலில் இருந்த 16 பேர் பலியாகி உள்ளனர்.மேலும் 59 பேர் காயம் அடைந்துள்ளனர். இது தெரியாமல் நடந்த விபத்து அல்ல, திட்டமிட்டு நடந்த தாக்குதல் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அதிபர் ஜெலன்ஸ்கி கூறும் போது, ``தாக்குதல் நடந்த போது மாலில் ஏறக்குறைய 1,000 பேர் இருந்திருப்பார்கள். இதில் எத்தனை பேர் ஏவுகணை தாக்குதலில் பலியாகி இருப்பார்கள் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்வதை பார்க்க அவர்களுக்கு பிடிக்கவில்லை. அந்த கோபத்தில்தான், ரஷ்யா இது போன்று நாசவேலைகளில் ஈடுபடுகிறது,’’ என்று கூறினார்.

இதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.இதனிடையே உக்ரைனில் உள்ள வணிக வளாகம் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு ஜி7 அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் அருவருக்கத்தக்க இந்த செயல் மிகப்பெரிய போர் குற்றமாகும் என்று ஜி7 அமைப்பு கூறியுள்ளது. இதனிடையே உக்ரைனின் கார்க்கிவ் நகரில் ரஷ்ய பகுதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


Tags : Russia ,Ukraine ,G7 , Ukraine, mall, Russia, missile, attack
× RELATED ரஷ்யாவில் வாக்குச்சீட்டில் ‘போர்...