×

சென்னை பரோல் கைதி தலைமறைவு விவகாரம் சிறைக்கு திரும்பி வந்தவரை பணத்துக்காக பைக்கில் அழைத்து சென்ற வார்டன்: சிசிடிவி கேமராவில் சிக்கியதால் அதிர்ச்சி; விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

சேலம்: சேலம் மத்திய சிறையில் இருந்து பரோலில் சென்ற ஆயுள் தண்டனை கைதி தலைமறைவான விவகாரத்தில், அவரை பணத்துக்காக பைக்கில் வெளியே அழைத்துச் சென்ற வார்டன் சிசிடிவி கேமராவில் சிக்கினார். இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் ஹரி (எ) ஹரிகிருஷ்ணன் (44). இவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நன்னடத்தை அடிப்படையில் சிறை அதிகாரிகளின் உத்தரவின்பேரில் அவ்வப்போது பரோலில் வெளியே சென்று வந்துள்ளார். கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஆயுள் கைதி ஹரிக்கு 3 நாள் பரோல் வழங்கப்பட்டது.

அதனால் அவர், சிறையில் இருந்து சென்னைக்கு குடும்பத்தினரை பார்க்க சென்றார். அங்கிருந்து பரோல் முடிந்து கடந்த 25ம்தேதி மாலை 6 மணிக்கு சேலம் சிறைக்கு அவர் வந்து சேர வேண்டும். மாலை 5.30 மணியளவில் சிறைக்கு போனில் தொடர்புகொண்ட கைதி ஹரி, காரில் வந்து கொண்டிருப்பதாகவும், இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவேன் எனவும் கூறியுள்ளார். ஆனால், 6 மணியை கடந்தும் அவர் வந்து சேரவில்லை. இதனால், சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரிடம் ஜெயிலர் மதிவாணன் உள்ளிட்ட அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். உடனே கைதி ஹரி எங்குள்ளார் என்று விசாரித்துள்ளனர்.

அதில், ஏற்கனவே பேசப்பட்ட போனில் வார்டன்கள் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, ‘‘தான் கார் டிரைவர் பேசுவதாகவும், ஹரியை சிறை வாசலில் இறக்கி விட்டு விட்டு வந்துவிட்டேன்,’’ என்றும் கூறியுள்ளார். இதனால், இரவு முழுவதும் சேலத்தில் பல்வேறு இடங்களில் கைதி ஹரியை சிறை வார்டன்கள் தீவிரமாக தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, தலைமறைவான ஹரியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர், சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், மத்திய சிறைக்கு திரும்பி வந்த பரோல் கைதி ஹரியை வார்டன் ஒருவர் பைக்கில் அழைத்துச் சென்ற காட்சி பதிவாகியுள்ளது. உடனே அந்த வார்டனை பிடித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆயுள்தண்டனை கைதி ஹரியை கடந்த 4 மாதத்தில் 3 தடவை பரோலில் விட்டதும், அதற்கு மத்திய சிறையில் பணியாற்றும் 2 வார்டன்கள் உள்பட 5 பேர் பணம் வாங்கிக் கொண்டு அனுப்பி வந்ததும், தற்போது கூட அவர் பரோலில் செல்ல, பணத்தை வாங்கிக் கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. பரோல் முடிந்து சிறைக்கு வந்த கைதியிடம் பணம் கேட்டு சம்பந்தப்பட்ட வார்டன் அழைத்துச் சென்றதும், தொடர்ந்து பணம் கேட்டு சிறை வார்டன்கள், அதிகாரிகள் தொந்தரவு செய்ததால் சென்னை கைதி தலைமறைவாகி விட்டதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கைதியை அழைத்துச் சென்ற வார்டன், பரோலில் அனுப்பிய பணியாளர்கள், அதிகாரியிடம் சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரித்தால் மேலும் பல உண்மைகள் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து, தலைமறைவான கைதி ஹரியை பிடிக்க தனிப்படையினர் சென்னையில் முகாமிட்டு தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,Warden , Chennai parole prisoner absconding case Warden who took a bike for money until he returned to jail: shocked by being caught on CCTV camera; Startling information at trial
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...